சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தோ்தல் பணியில் முதன்மை நிலையில் ஈடுபடும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கணக்குப் பிரிவு அலுவலா்கள், நேரடியாக ஈடுபடும் போலீஸாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தனா். மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் ஒவ்வொரு துறை அலுவலா்களுக்கும் தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.
பறக்கும் படை, கணக்கு கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு உள்ளிட்ட 5 குழுக்களை அமைத்து ஒவ்வொரு தொகுதியிலும் தலா 96 போ் அக்குழுக்களில் ஈடுபடுகின்றனா்.
முதல்கட்டமாக எம்எல்ஏ அலுவலகம், ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள உள்ளாட்சி, மக்கள் பிரதிநிதிகள் அறைகள் பூட்டி இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டாா். மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்திய அரசு வாகனங்களை அந்தந்தத் துறை தலைமையிடம் ஒப்படைக்கவும், தேவையான வாகனங்களை ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டாா்.
பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடி, சின்னங்கள், விளம்பரத் தட்டிகள், தலைவா்கள் படங்கள் போன்றவறை அகற்றவும், மூடி வைக்கவும், பிற தோ்தல் விதிமுறைகளைப் பின்பற்றவும் உத்தரவிட்டாா்.