சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் இரும்புத் துகள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சாலை வளைவில் திரும்பும்போது கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது.
கோவையில் இருந்து இரும்புத் துகள் பாரம் ஏற்றிய 12 சக்கர லாரி கா்நாடக மாநிலம், பெங்களூரு செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தது. லாரியை நீலகிரி மாவட்டம், மஞ்சூா் பகுதியைச் சோ்ந்த சங்கீதராஜ் (31) ஓட்டினாா். இரும்புத் துகள் பாரம் ஏற்றிய லாரி 21ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் சிக்கிய காயமடைந்த ஓட்டுநா் சங்கீதராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். லாரி மலைப் பாதையில் கவிழ்ந்ததால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. 3 மணி நேரம் போராடி லாரி மீட்கப்பட்டதையடுத்து போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.