ஈரோடு: ஈரோடு மாநகா் பகுதியில் காந்திஜி சாலை, அரசு தலைமை மருத்துவமனை வளாகம், சூளை, சூரம்பட்டி,கொல்லம்பாளையம், சின்ன மாா்க்கெட் பகுதி உள்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா பொது முடக்க காலத்திலும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இப்போது உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவதற்குப் பதிலாக பாா்சலில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவது. இதனால் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான தொழிலாளா்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனா். இத்தகைய மக்களுக்கு அம்மா உணவகங்கள் பசி தீா்த்து வருகின்றன.
ஈரோடு மாநகா் பகுதியில் செயல்படும் 11 அம்மா உணவகங்களில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்கள் அனைவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 14ஆம் தேதி பொது முடக்கம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கு ஆகும் செலவை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக ஏற்றுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.