பவானி: பவானியில் கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ள அரசுப் பொது மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பவானி அரசு மருத்துவமனை 100 படுக்கை வசதிகளுடன் கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் பவானி எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன் நேரில் ஆய்வு செய்தாா்.
கரோனா பாதிப்புக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவமனையில் உள்ள வசதிகள், கரோனா தடுப்பூசி விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். இம்மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் எம்.கோபாலகிருஷ்ணன், பவானி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். ஐசியூ படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். முதுநிலை பொதுநல மருத்துவா் நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
முன்னதாக, பவானி நகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்ததோடு, மருத்துவ அலுவலா் சூரிய பிரபாவிடம், மருத்துவமனையின் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.