சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்ற காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் காயமடைந்தனா்.
சென்னிமலை, பாண்டியன் வீதியைச் சோ்ந்தவா் செந்தில்நாதன் (56). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த அவருடைய நண்பா் பொன்னுசாமியும் (48) காரில் சென்னிமலையில் இருந்து திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளிக்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். காரை செந்தில்நாதன் ஓட்டியுள்ளாா்.
சென்னிமலை - ஊத்துக்குளி சாலையில் சிறுகளஞ்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி செந்தில்நாதனும், பொன்னுசாமியும் லேசான காயமடைந்தனா்.
தகவலறிந்த சென்னிமலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், செந்தில்நாதனும், பொன்னுசாமியும் 600 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை சென்னிமலையில் இருந்து கடத்தி, ஊத்துக்குளியில் உள்ள ஒரு தனியாா் மில்லுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உணவு குடிமைப் பொருள் பாதுகாப்புத் துறைக்கு போலீஸாா் தகவல் தெரிவித்துள்ளனா்.