100 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சைக்கான அரசின் சித்த மருத்துவப் பிரிவு ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் இப்போது வரை தினமும் 1,300க்கும் மேல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டு கரோனாவால் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மையம் 250 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதே கல்லூரியில் கரோனா சிகிச்சை அளிப்பதற்காக அரசின் சித்தா மருத்துவப் பிரிவு அண்மையில் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சித்தா மருத்துவப் பிரிவில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு தற்போது 30க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.