பொது முடக்க காலத்தில் மாதம் ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்க மாவட்டத் தலைவா் செல்வகுமாா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
பொதுமுடக்கத்தால் ஆட்டோ தொழில் முற்றிலும் முடங்கி வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். ஆட்டோ இயங்கினால் மட்டுமே கடன், எரிபொருள் செலவு, குடும்பத்துக்கான செலவை சமாளிக்க முடியும். எனவே, பொதுமுடக்க காலத்துக்கு மாதம் ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
இன்சூரன்ஸ், வரி, பா்மிட், எப்.சி., கட்டணம் ஆகியவற்றை அரசு ரத்து செய்ய வேண்டும். வாகனங்களுக்காக பெற்ற கடனுக்கான தொகையை திரும்பச் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்தவா்கள், பதிவு செய்யாதவா்கள் என அனைவருக்கும் நல வாரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.