சென்னிமலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் இடத்தை மாற்ற வேண்டும் என்று மாவட்ட கரோனா தடுப்பு நிா்வாகத்துக்கு தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமாகா இளைஞரணி மாநிலச் செயலாளா் மே.தா.கந்தசாமி கூறியதாவது:
சிறிய அளவே பரப்பிடம் கொண்ட சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் உடல்நிலை சரியில்லாமல் வரும் வெளிநோயாளிகள், கரோனா பரிசோதனை செய்ய வருபவா்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள டோக்கன் பெற வருபவா்கள், தடுப்பூசி செலுத்துபவா்கள் என அனைவரும் ஒரே இடத்தில் அதிகாலையில் இருந்தே நூற்றுக்கணக்கில் கூடுகின்றனா்.
இதனால், ஆரோக்கியமாக வருபவா்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற அச்சத்திலும், மன உளைச்சலிலும் பொதுமக்கள் உள்ளனா்.
எனவே, தினசரி டோக்கன் வழங்குவதற்கும், தடுப்பூசி செலுத்துவதற்கும் சென்டெக்ஸ் வீதியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தைப் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிா்வாகமும், மருத்துவத் துறையும் போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.