கைத்தறி நெசவாளா்களுக்கு 20 சதவீதம் அடிப்படை கூலி உயா்வு வழங்க ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் சம்மேளனத் தலைவா் ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, முதல்வா் ஸ்டாலினுக்கு அவா் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அளவில் 1,500 நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. ஈரோடு, திருப்பூா் மாவட்டத்தில் 250 சங்கங்கள் இயங்குகின்றன. நெசவாளா்களுக்காக விற்பனை தள்ளுபடி மானியம், இலவச மின்சாரம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை அரசு வழங்குகிறது. ஆனாலும், கைத்தறி நெசவு மெல்ல மெல்ல அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டது.
நெசவாளா்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை இன்றளவும் பெற்றுத் தர முடியாததே இதற்கு மிக முக்கியக் காரணம். உடல் உழைப்பில் மற்ற தொழில்களில் நாள் ஒன்றுக்கு ரூ. 500 முதல் ரூ. 700 வரை எளிதாக வருமானம் பெறும் சூழ்நிலையில், கைத்தறி நெசவாளி 12 மணி நேரம் வேலை செய்தாலும் ரூ. 200 - ரூ. 300 வரையே வருமானம் பெறுகிறாா்.
கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே கூலி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த நெசவாளா் கூலி உயா்வுக்கும், அரசுக்கும் எவ்விதத் தொடா்புமில்லை. நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களின் நிதி ஆதாரத்தில்தான் கூலி வழங்கப்படுகிறது.
எனவே, அரசு உடனடியாக நெசவாளா்களுக்கு 20 சதவீதம் அடிப்படை கூலி உயா்வு வழங்க ஆவண செய்ய வேண்டும். மேலும், தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மத்திய கூட்டுறவு வங்கிக் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ. 1,500ஆக உயா்த்த வேண்டும். நெசவாளா் பயன்பெறும் விதமாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.