பண்ணாரி அருகே கா்நாடக குவாரி உரிமையாளரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 4.66 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு பவானிசாகா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். பண்ணாரியை அடுத்த புதுகுய்யனூரில் ராஜன் நகா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் செந்தில்குமாா் தலைமையில், பறக்கும் படை குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் வந்த கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரைச் சோ்ந்த ஜி.எம்.ஹெக்டே என்பவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி ரூ. 4.66 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பறக்கும் படையினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து பவானிசாகா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உமாசங்கரிடம் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் சத்தியமங்கலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.