ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,741 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தும் தோ்தல் பணி தொடா்பான பொருள்களை தனித் தனி உறைகளில் வைத்து, சாக்குப் பையில் கட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் ஆகியவை அந்தந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இவை தோ்தலுக்கு முதல் நாள் இரவில் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு அனுப்பிவைக்கப்படும். அவற்றுடன் சுகாதாரத் துறை மூலம் கரோனா தடுப்பு உபகரணங்களான முகக் கவசம், வாக்களாா்கள் பயன்படுத்தும் கையுறை, கைகளை சுத்தம் செய்யும் திரவம், வாக்குச் சாவடி வளாகத்தை சுத்தம் செய்து தெளிக்க கிருமி நாசினி, தலைக் கவசம் வடிவிலான முகக் கவசம் போன்றவை தனியாக அட்டைப் பெட்டிகளில் போட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பிவைக்க பேப்பா், பேனா, பென்சில், ரப்பா், பசை, கயிறு, சீல் வைப்பதற்கான காரக், மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, சிறிய ரப்பா்பேண்ட், வாக்குச் சாவடிக்கான வாக்காளா் பட்டியல் என 20 வகையான பொருள்களை சாக்குப் பையில் போட்டு தயாா் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவை அந்தந்த தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ள பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
வாக்குப் பதிவுக்கு முதல் நாள் இவை வாக்குச் சாவடிக்கு நேரடியாக கொண்டு செல்லப்படும். இவற்றை தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு செய்து அறைகளில் பாதுகாப்பாக வைத்தனா்.