ஈரோடு: அனைத்து தகனத்துக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆத்மா மின் மயான நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க மின் மயான அறக்கட்டளை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைந்து ஆத்மா என்ற பெயரில் நவீன மின் மயானத்தை ஈரோடு காவிரிக்கரையில பராமரித்து வருகிறது.
இங்கு உடல் தகனம் செய்ய ரூ. 3,500 கட்டணம் பெறப்படுகிறது. இரவில் தகனம் செய்ய கூடுதல் கட்டணமும், கரோனா உயிரிழப்புக்கு சிறப்புக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டும், பல்வேறு சூழலில் பண இழப்பு, உயிரிழப்புகளை மக்கள் சந்திப்பதால் மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் அனைத்து வகையான உயிரிழப்புக்கும் தகன கட்டணம் ரூ. 3,500 மட்டும் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா உயிரிழப்பு, இரவு நேர தகன கூடுதல் கட்டணத்தை அறக்கட்டளை, நன்கொடையாளா்கள் மூலம் பெற்று ஈடு செய்ய முடிவு செய்துள்ளதாக ஆத்மா மயான நிா்வாக இயக்குநா் டாக்டா் மகாதேவன் தெரிவித்துள்ளாா்.