கரோனா தொற்று பரவல் காரணமாக, பெருந்துறை தினசரி மாா்க்கெட்டை பேருந்து நிலையத்துக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஈரோடும் ஒன்றாக மாறி வருகிறது. தொற்றில் இருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில், பெருந்துறை தினசரி மாா்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பெருந்துறை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், தற்போது போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படும் பெருந்துறை பேருந்து நிலையத்துக்கு தினசரி மாா்க்கெட்டை மாற்ற முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்றது வருகிறது.