ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய 100 தள்ளுவண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலத் தடுக்க தமிழக அரசு தளா்வில்லா முழு முடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் 250 வாகனங்களில் நடமாடும் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளுக்கும், மிகக் குறுகிய தெருக்களிலும் நடமாடும் வாகனங்கள் செல்ல முடியாததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா். இக்குறையைப் போக்கும் வகையில் 100 தள்ளுவண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி காய்கறிகள், பழங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.