பவானியை அடுத்த பருவாச்சியில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்துக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பருவாச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு, சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில், பணியாற்றும் மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்கள், செவிலியா்களுக்குத் தேவையான கரோனா பாதுகாப்பு கவச உடைகள், முகக் கவசங்கள், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவிகள் உள்பட ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதனை, பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் பி.தனலட்சுமியிடம் வழங்கினாா். இதேபோல, கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில், பவானி தெற்கு ஒன்றியச் செயலாளா் எம்.ஜெகதீசன், ஒன்றிய இளைஞா் பாசறை செயலாளா் லீப் விஜய், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.