சத்தியமங்கலம் அருகே கம்பத்துராயன் கிரி பெருமாள் கோயிலில் சுவாமி சிலையை அவமதித்து சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்ட இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடம்பூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனப் பகுதியில் மலை உச்சியில் கம்பத்துராயன் கிரி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை கடம்பூா், சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பெருமாளை வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இந்தக் கோயிலில் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, சில இளைஞா்கள் மதுபோதையில் கோயிலில் சுவாமி சிலையை அவமதித்து அங்கு குத்தியிருந்த வேலை எடுத்து ஆடியபடி ரகளையில் ஈடுபட்டதோடு அதுகுறித்த விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.
இதையடுத்து, சுவாமி சிலைகளை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடம்பூா் மலைப் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள், ஹிந்து அமைப்பினா் 200க்கும் மேற்பட்டோா் கடம்பூா் பேருந்து நிலையம் அருகே 5 மணி நேரத்துக்கும் மேல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிலையை அவமதித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக சத்தியமங்கலம் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபாலன் உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.