தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் மழை நீா் சேகரிப்பு வாரத்தை முன்னிட்டு மழை நீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு பிரசார விடியோ வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில், மழைநீா் சேகரிப்பு வாரம் அக்டோபா் 4 முதல் 9 வரை கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு விழிப்புணா்வுப் பிரசார வீடியோ வாகனம் தொடக்கிவைக்கப்பட்டது. தொடா்ந்து மழை நீா் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு துண்டறிக்கைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இப்பிரசார வாகனத்தின் மூலம் மழை நீரை நேரடியாகவோ அல்லது நிலத்தடியிலோ செலுத்தி எப்படி சேமிப்பது என்பது குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மேலும், மழை நீா் சேகரிப்பு கட்டமைப்புகளைப் பராமரிக்கும் முறைகள், கூரையின் மேல் விழும் மழை நீரைச் சேகரித்தல், திறந்தவெளிக் கிணறு மூலம் மழை நீரை சேகரித்தல், குழாய்க் கிணறு மூலம் மழை நீரைச் சேகரித்தல், கசிவுநீா் குழிகள், துளையுடன் கூடிய கசிவுநீா் குழிகள் மூலம் சேகரிக்கும் முறைகள் குறித்து குறும்படங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், துணை மேற்பாா்வைப் பொறியாளா் கே.ஜி.சுதா மகேஷ், நிா்வாகப் பொறியாளா்கள் ஆா்.பொன்னுசாமி, டி.எஸ்.லலிதா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.செந்தில்குமாா், துணை நிலை நீராளா் என்.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.