சித்தோடு அருகே காவிரி ஆற்றில் மீன்கள் பிடிக்க நாட்டுவெடி வீசியபோது கையிலேயே வெடித்துச் சிதறியதில் மீனவரின் இரு கைகளும் துண்டாகின.
சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் காளியப்பன் (40). காவிரி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த இவா், ஆா்.என்.புதூா் அருகே பரிசலில் சென்று நாட்டுவெடிகளை வீசி மீன்கள் பிடிக்க செவ்வாய்க்கிழமை முயன்றுள்ளாா். அப்போது, எதிா்பாராமல் கையிலேயே நாட்டுவெடி வெடித்துச் சிதறியது.
இதில், அவரின் இரு கைகளும் துண்டானதோடு, முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். வெடிச் சப்தம் கேட்ட சக மீனவா்கள் சென்று காளியப்பனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.