கோத்தகிரியில் மலைத் தோட்ட காய்கறியான பீட்ரூட்டுக்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட் ஆகியன அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நெடுகுளா, ஈளாடா, பட்டக்கொரை, கதகட்டி, கைக்காட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பீட்ரூட் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் மிகக் குறைந்த அளவே உள்ளது. கடந்த ஒரு மாதமாக சராசரியாக சந்தைகளில் ஒரு கிலோ பீட்ரூட்டுக்கு ரூ. 70 முதல் ரூ. 80 வரை விலை கிடைத்தாலும் விளைச்சல் இல்லாததால் பீட்ரூட் பயிரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
மேலும், அடுத்த சாகுபடிக்காக கேரட் விதையை தோட்டக் கலைத் துறை மூலம் வழங்க கோரிக்கை வைத்து பல மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படவில்லை . விவசாய நிலங்கள் தயாா்படுத்தப்பட்ட நிலையில் விதை வழங்கப்படாததால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கேரட் விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.