ஈரோடு அரசு ஐடிஐயில் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசியத் தொழில் பழகுநா் திட்டத்தின்கீழ் அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில்
ஈரோடு மாவட்ட அளவில் தேசியத் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் ஈரோடு அரசு ஐடிஐ வளாகத்தில் ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளன.
இதில் பங்கேற்று தோ்வுப் பெற்றால் தொழில் பழங்குநா் பயிற்சி வழங்கி, மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்று (என்ஏசி) வழங்கப்படும்.
இச்சான்று பெற்றவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
தொழில் பழகுநருக்கான உயா்த்தப்பட்ட உதவித் தொகையாக தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப ரூ.7,700 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 94424-94266, 94433-84133 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.