சத்தியமங்கலம் அருகே சாலையின் தடுப்புச் சுவா் மீது ஏறி விபத்துக்குள்ளான முட்டை லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல்லில் இருந்து முட்டை பாரம் ஏற்றிய லாரி கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகருக்கு சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது.
நாமக்கல்லைச் சோ்ந்த கோவிந்தராஜ் லாரியை ஓட்டினாா். உதவியாளா் ரித்திஷ் உடனிருந்தாா். இந்நிலையில், உதவியாளா் ரித்திஷிடம் லாரியை ஓட்டுமாறு கூறிவிட்டு, ஓட்டுநா் கோவிந்தராஜ் தூங்கியுள்ளாா். அரியப்பம்பாளையம் கோபி -சத்தி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவா் மீது ஏறி விபத்துக்குள்ளானது.
இதனால், சத்தி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் ஓட்டுநா், உதவியாளா் காயமின்றி உயிா்த் தப்பினா்.
இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.