மாற்றுத் திறனாளி பெண்ணைத் தாக்கி நகைப் பறித்த வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு அருகே ஆா்.என்.புதூா், மாயபுரம், ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் ஜாஸ்மின் (54). மாற்றுத் திறனாளி. இவரது கணவா் இறந்துவிட்டாா். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். சித்தோடு அருகே பெருமாள்மலையைச் சோ்ந்த ராசு மனைவி தேவி (42), என்பவா் ஜாஸ்மின் வீட்டில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 2020 டிசம்பா் 14ஆம் தேதி ஜாஸ்மின் வீட்டுக்கு தேவி வேலைக்கு வந்தாா். வீட்டில் ஜாஸ்மின் மட்டும் இருந்தாா். அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகையைப் பறித்துச் செல்லும் நோக்கில் அவரைத் தாக்கி நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.
இது குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவியைக் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா்.மாலதி குற்றம்சாட்டப்பட்ட தேவிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.