ஈரோடு பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகா் மையப் பகுதியில் 12 ஏக்கா் பரப்பளவில் ஈரோடு பேருந்து நிலையம் 1973ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் ரூ.44 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 100க்கும் மேற்பட்ட பழைய கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
தற்போது விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நாமக்கல், சேலம் பேருந்துகள் நிற்கும் இடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு அங்கு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் 70 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. மாா்ச் மாத இறுதிக்குள் விரிவாக்கப் பணிகள் முழுவதும் நிறைவடையும் என்றனா்.