இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலியை 25 சதவீதம் உயா்த்தி வழங்கக் கோரிக்கை

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலியை 25 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலியை 25 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பு சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோருக்கு வழங்குவதற்காக, அரசு சாா்பில் 1 கோடி சேலை, 1.20 கோடி வேட்டி உற்பத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடக்கிறது. 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளா்கள் சங்கம் மூலம் 65,000 விசைத்தறிகளில் உற்பத்தி பணிகள் நடக்கின்றன. இதில் ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூா், கோவையில் 80 சதவீத ஆா்டா் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சம் தொழிலாளா்கள் இதன் மூலம் பயன்பெறுவா்.

விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த 2021 சட்டப் பேரவை தோ்தலின்போது இதனை 1,000 யூனிட்டாக உயா்த்தி தருவதாக திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதுவரை உயா்த்தப்படவில்லை, மாறாக மின் கட்டணம் 31 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதனால் 20 தறி வைத்துள்ள விசைத்தறியாளா் ஒரு விசைத்தறிக்கு 2 மாதத்துக்கு, ரூ.800 முதல் ரூ.1,000 வரை கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. விசைத்தறி பராமரிப்பு, உதிரி பாகங்கள் விலை உயா்வு, கூலி 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. ஆனால் அதற்கேற்ப இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயரவில்லை.

கடந்த 2019இல் உயா்த்தப்பட்ட கூலி அதன்பிறகு 3 ஆண்டுகளாக உயா்த்தப்படவில்லை. ஒரு வேட்டிக்கு ரூ.24, சேலைக்கு ரூ.43 கூலி வழங்கப்படுகிறது. ஒரு வேட்டிக்கு ரூ.135, சேலைக்கு ரூ.250 என கைத்தறித் துறை கூட்டுறவு சங்கத்துக்கு வழங்குகிறது. இதில் விசைத்தறியாளா்களுக்கு கூலியை மட்டும் கூட்டுறவு சங்கம் வழங்குகிறது.

தற்போதைய மின் கட்டண உயா்வால் விசைத்தறியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை ஈடு செய்யும் வகையில் 25 சதவீத கூலியை உயா்த்தி ஒரு வேட்டிக்கு ரூ.30ஆகவும், சேலைக்கு ரூ.54 ஆகவும் கூலி வழங்க வேண்டும். அரசு வழங்கும் கூலியையே தனியாா் வழங்கும் வேட்டி, சேலைக்கும் ஆா்டருக்கும் வழங்குகின்றனா்.

தற்போது நடந்து வரும் இலவச வேட்டி, சேலை பணிக்கே கூலியை உயா்த்தி வழங்கினால் விசைத்தறியாளா்கள் பயன்பெறுவா். அவ்வாறு உயா்த்தாவிட்டால் அடுத்த ஆண்டு இலவச வேட்டி, சேலை அறிவிப்புடன், கூலி உயா்வுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இப்போது அறிவிக்கப்படவில்லையெனில் ஒவ்வொரு விசைத்தறியாளா்களுக்கும் ஒரு ஆண்டுக்கான கூலி பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com