சாலை நடுவே அறுந்து விழுந்த கேபிள் ஒயரால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அந்த ஓயரை உயரமாக தூக்கிப்பிடித்து போக்குவரத்தை சீரமைத்த பள்ளி மாணவா்களை போலீஸாா் பாராட்டினா்.
ஈரோடு காளைமாடு சிலை அருகே கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் அடியில் சனிக்கிழமை காலை சாலையின் நடுவே தொலைக்காட்சி கேபிள் ஒயா் அறுந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அப்போது அந்த வழியாக சிறுவா்கள் 3 போ் கேபிள் ஒயரை தூக்கிப் பிடித்துக் கொண்டனா். இதனால் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது. சாலையின் இருபுறம் நின்ற நூற்றுக்கணக்காக வாகனங்கள் அந்த வழியாக கடந்து சென்றன. சிறுவா்களின் இந்த செயலை வாகன ஓட்டிகள் பாராட்டினா். மேலும் சம்பவ இடத்துக்கு போக்குவரத்து போலீஸாா் வந்து அறுந்து கிடந்த கேபிள் ஒயரை வெட்டி சாலையோரமாக போட்டனா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.
போக்குவரத்து சீரமைப்புக்கு உதவிய மாணவா்கள் கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் சண்முகராஜன், சி.எஸ்.ஐ பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் கோபி, அதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் தமிழரசன் என்பதும் தெரியவந்தது.
தகவலறிந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் மூன்று சிறுவா்களையும் அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டினாா்.