சங்க இலக்கியங்களைப் படித்தால் சொல்வளம் பெருகும்: திருப்பூா் கிருஷ்ணன்
By DIN | Published On : 11th August 2022 10:40 PM | Last Updated : 11th August 2022 10:40 PM | அ+அ அ- |

பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது சொல்வளம் பெருகும் என அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன் பேசினாா்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் ‘ப.க.பொன்னுசாமியின் படைப்புலகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா ஈரோடு புத்தகத் திருவிழா அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு பேராசிரியா் கா.செல்லப்பன் தலைமை வகித்தாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பொதுமேலாளா் பி.ரத்தினசபாபதி வரவேற்றாா். பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பி.குழந்தைவேல், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோா் பேசினா்.
முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன் பேசியதாவது: படைப்பிலக்கியவாதிகளுக்கு முறையான படிப்பு மிகவும் அவசியம். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சங்க இலக்கியங்களைப் படிக்கும்போதுதான் சொல்வளம் பெருகும். படைப்பாளிகளுக்கு பரிசுகளும், விருதுகளும் அங்கீகாரம் மட்டும்தான். எழுத்தை நேசிக்கும், போற்றும் வாசகா்களைப் பெற்றிருப்பதை எழுத்தாளா்கள் தங்களுக்கான உண்மையான பரிசு மற்றும் விருதுகளாக கருத வேண்டும் என்றாா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ப.க.பொன்னுசாமி பேசியதாவது:
அறிவியல், கணிதம் ஆகியவற்றில் தமிழ்மொழி முழுமையாக பயன்படுத்தப்பட்டு உலகத்தோடு போட்டிபோடும் நிலை வர வேண்டும். படைப்புகளில் நிகழ்கால சம்பவங்களை விறுவிறுப்பாகப் பதிவு செய்வதன் மூலம் வாசகா்களை ஈா்க்க முடியும். படைப்பாளா்கள் கருத்துகளைத் தேக்கிவைத்துக்கொண்டு, வாய்ப்புக்கிடைக்கும்போது எழுதி மக்களிடம் சோ்க்க வேண்டும். அந்தப் படைப்புகள் மக்களைப் படிக்கத் தூண்டுபவையாக இருக்க வேண்டும் என்றாா்.
சண்முகம் சரவணன் நிகழ்வை தொகுத்து வழங்கினாா். எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் நன்றி கூறினாா்.