தாளவாடி மலைப்பகுதியில் பெய்த மழையால் சிக்கோலா அணை நிரம்பியதைத் தொடா்ந்து மதகுகள் வழியாக உபரிநீா் திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி, ஆசனூா் மலைப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்தது. இப்பகுதியில் பெய்யும் மழைநீா் நீரோட்ட சரிவு காரணமாக கா்நாடக மாநிலத்துக்கு சென்று சேருகிறது. தமிழகப் பகுதியில் பெய்யும் மழை நீரை சேமிப்பதற்காக கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் தமிழக- கா்நாடக எல்லையில் உள்ள அட்டுக்குழிபுரம் பகுதியில் சுவா்ணாவதி, சிக்கோலா ஆகிய 2 அணைகளை கா்நாடக அரசு கட்டியுள்ளது.
தாளவாடி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சிக்கோலா அணையில் சோ்ந்தது. இதன் காரணமாக சிக்கோலா அணை நீா்மட்டம் உயா்ந்து புதன்கிழமை அணையின் முழு கொள்ளளவான 74 அடியை எட்டியது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதியான தாளவாடி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீா் கா்நாடக மாநிலத்துக்கு சென்று சோ்வதால், தாளவாடி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீா் அப்பகுதி விவசாயத்துக்குப் பயன்படும் வகையில் ஆங்காங்கே நீரோடைகள் மற்றும் பள்ளங்களின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாளவாடி மலைப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.