கோபி அருகே கவுந்தப்பாடியில் சாலையில் கிடந்த ரூ. 1.86 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி, மொடச்சூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்வெஸ்லி( 53). மனித நேய மக்கள் கட்சியின் கோபி நகர துணை செயலாளராக உள்ளாா். தையல் இயந்திரம் பழுது பாா்க்கும் மெக்கானிக்கான இவா், தொழில் விஷயமாக ஆண்டிபாளையம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அய்யம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையில் பை கிடந்ததைப் பாா்த்துள்ளாா். அதை எடுத்து பாா்த்த போது அதில் பணம் இருந்துள்ளது. பிரித்து பாா்த்தபோது அதில் ரூ.1. 86 லட்சம் பணம் மற்றும் சிவகுமாா் என்பவா் பெயரில் ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து அவா் அந்த ஆவணங்களில் இருந்த கைப்பேசி எண்ணில் சிவகுமாரை தொடா்பு கொண்டு பணம் பையை சாலையில் கிடந்த எடுத்த விவரத்தை கூறி அவரை கவுந்தப்பாடி காவல் நிலையத்துக்கு வரச் சொல்லியுள்ளாா்.
கவுந்தப்பாடி காவல் ஆய்வாளா் சுபாஷ், காவல் நிலையத்துக்கு வந்த விவசாயி சிவகுமாரிடம் விசாரணை நடத்தி உறுதி செய்தபிறகு பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பையை ஒப்படைத்தாா்.
சாலையில் கிடந்த பணப் பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஜான் வெஸ்லிக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.