பவானி: அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நன்றி தெரிவித்தாா்.
மலைப்பகுதிகள் அதிகம் நிறைந்த அந்தியூா் தொகுதியில் புதிதாக கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. மேலும், புகழ்பெற்ற அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் உள்பட 4 கோயில்களுக்கு திருப்பணி நடத்தவும் அறிவிக்கப்பட்டது. பா்கூா் ஊராட்சி, கத்திரிமலைக் கிராம மக்களின் 70 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு வரை ரூ.1.47 கோடியில் கப்பி சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், பா்கூா் மலை மக்களின் வேளாண் பொருள்களைப் பாதுகாக்க 500 டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் அந்தியூா் தொகுதி மக்களின் சாா்பில் நன்றியினைத் தெரிவித்தாா். மேலும், திமுக அரசின் ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, பா்கூா் மலைப்பகுதியில் மடம் - முரளிக்கு இடையில் மாற்று மலைப்பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தாா்.