கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகள் அமைச்சரிடம் முறையீடு
By DIN | Published On : 30th September 2022 12:00 AM | Last Updated : 30th September 2022 12:00 AM | அ+அ அ- |

கனி ஜவுளிச் சந்தையில் ஏற்கெனவே கடை வைத்திருப்போருக்கு புதிய வணிக வளாகத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
ஈரோடு கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகள் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியை ஈரோட்டில் வியாழக்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:
ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய இடத்தில் நிரந்தரக் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தோம். பொலிவுறு நகரம் திட்டத்தில் பழைய கடைகளை அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடந்து முடியும் நிலையில் உள்ளது.
மாற்று ஏற்பாடாக தகரத்தால் ஆன தற்காலிக மேற்கூரை அமைத்து கடந்த 2 ஆண்டுகளாக அங்கு வியாபாரம் செய்து வருகிறோம். இப்போது புதிய வணிக வளாக பணிகள் நிறைவடைந்துள்ளதால் ஏற்கெனவே கடை வைத்துள்ளவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடையை ஒதுக்கித்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.