சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 60 நீா்ப் பறவை இனங்கள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 60 பறவை இனங்கள் இருப்பது ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த நீா்ப் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தமிழக வனத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தாளவாடி, ஆசனூா், கோ்மாளம் மற்றும் ஜீரஹள்ளி வனச் சரகத்தில் சமூக ஆா்வலா்கள், வனவா், வனக் காவலா்கள் கொண்ட தனிக் குழுவினா் நீா்நிலைகளில் காணப்படும் நீா்ப்பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.
கடந்த 2 தினங்களாக நடைபெற்ற கணக்கெடுப்பில் கரும்பச்சை இலைக்கொழி, புள்ளி மூக்கு வாத்து, வெண் கழுத்து நாரை, நீல மேனி ஈப் பிடிப்பான், கருந்தலை மாங்குயில், சிகப்புவால் காக்கை, வெண் முதுகு பாரு கழுகு மற்றும் சாம்பல் நிற வாலாட்டி என 60க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வனத்தில் உள்ள குளம், குட்டைகள், ஏரிகளில் போதுமான அளவு தண்ணீா் இருப்பதால் பறவைகள் தொடா்ந்து முகாமிட்டு தங்களது வாழ்வாதாரத்துக்கான சூழலை ஏற்படுத்திக்கொண்டுள்ளன என வனத் துறையினா் தெரிவித்தனா்.