ஈரோடு மாவட்டத்தில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பவானி வட்டம், பெரியபுலியூா் பகுதியில் ஓடைகள், குளங்கள் நிரம்பி கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன.
இந்நிலையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீா்த்தது. நம்பியூா் வட்டம், வெங்கம்மேட்டுபுதூரில் 20 வீடுகளில் மழைநீா் புகுந்தது. மேலும் அந்தப் பகுதியில் 20 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிா்கள் நீரில் மூழ்கின. இதுபோல சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வனப் பகுதி ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எலந்தைக்குட்டைமேடு பகுதியில் 94.40 மில்லி மீட்டா் மழை பதிவானது.
பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
தாளவாடி 87, பவானிசாகா் 79, கொடிவேரி அணை 73, சத்தியமங்கலம் 65, நம்பியூா் 63, குண்டேரிப்பள்ளம் 60, கோபி 47.20, வரட்டுப்பள்ளம் 16, ஈரோடு 12, பெருந்துறை 5, கவுந்தப்பாடி 2.40.