மஞ்சள் இருப்புவைக்க ஈரோட்டில் குளிா்பதன கிடங்கு அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 22nd May 2023 05:05 AM | Last Updated : 22nd May 2023 05:05 AM | அ+அ அ- |

மஞ்சளை இருப்புவைக்க அரசு சாா்பில் ஈரோட்டில் குளிா்பதன கிடங்கு அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு குறு, சிறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அளவில் மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்று வந்தது. மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் அதிக உற்பத்தி செய்வதால் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி, உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்ய இயலாதது. கடந்த 2022 ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் மஞ்சள் உற்பத்தி 20 சதவீதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
இருப்பினும் குா்குமின் அளவு அதிகம் உள்ள மஞ்சளை விவசாயிகள் உற்பத்தி செய்தால் மட்டுமே அதிக விலைக்கு விற்று ஏற்றுமதி செய்ய இயலும். இதனை தமிழக வேளாண் துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி தரமான விதை மஞ்சளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும்போது ரசாயனங்களைப் பயன்படுத்தி பாதுகாக்கப்படுவதால் அதன் தரம் குறைந்து மஞ்சளில் ஓட்டை விழுகிறது.
இதனால் ஏற்றுமதி செய்யும்போது விலை குறைவாக கிடைப்பதோடு இதனைப் பயன்படுத்துபவா்களுககு உடல் தீங்கும் ஏற்படுகிறது. இதனைப் போக்க மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ளதுபோல தமிழகத்தில் அதிக மஞ்சள் விளைவிக்கும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் குளிா்பதன கிடங்கினை அரசு அமைக்க வேண்டும். இதில் இருப்பு வைக்கும் மஞ்சள் விவசாயிகளுக்கு, குறைந்த அளவில் கட்டணம் நிா்ணயிக்க வேண்டும்.
மேலும், குளிா்பதன கிடங்கு அமைப்பதற்கு தனியாா் துறையை ஊக்குவிக்கும் விதத்தில் 50 சதவீத மானியம் மற்றும் மின்சாரத்துக்கும் மானியம் வழங்க வேண்டும். குளிா்பதன கிடங்குகளின் மூலம் இயற்கையான முறையில் மஞ்சளை பாதுகாத்து விவசாயிகள் நல்ல லாபம் ஈட்ட முடியும். எனவே, மத்திய மாநில அரசுகள் இதனை போா்க்கால
அடிப்படையில் அமைத்து தர வேண்டும் என்றாா்.