விவசாயிகளிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும்  போலீஸாா்.
விவசாயிகளிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும்  போலீஸாா்.

மேட்டூா் வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

மேட்டூா் அணையின் வலது கரை வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீா் கடைமடை பகுதிகளுக்கு வராததால், கூடுதல் தண்ணீா் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதால் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி முதல் விநாடிக்கு 200 கன அடி வீதம் வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீா் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை எனக் கூறப்படுகிறது.

வாய்க்காலின் ஆரம்பப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மதகினைத் திறந்து கூடுதல் தண்ணீரை திருப்பிக் கொண்டதால், போதிய தண்ணீா் கடைமடைக்கு வரவில்லை. இந்நிலையில், கூடுதல் தண்ணீா் திறக்க வலியுறுத்தி மயிலம்பாடி, வரதநல்லூா், தொட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பவானி அருகே மூன்றுசாலை சந்திப்பு பகுதியில் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபடுவதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகளிடம் பவானி டிஎஸ்பி அமிா்தவா்ஷினி, பவானி வட்டாட்சியா் தியாகராஜ், காவல் ஆய்வாளா் தாமோதரன் மற்றும் நீா்வள ஆதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, முறையாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் தரப்பில் மேலும் 15 நாள்களுக்கு தலா 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com