காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் தீவிர வாகனத் தணிக்கை
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தமிழக, கா்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் புதன்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் மக்கள் அச்சமின்றி வாக்கு செலுத்துவதற்கான முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் செய்து வருகிறது. அதே நேரத்தில் வாக்காளா்களுக்கு பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலும் பறக்கும் படையினா் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக, கா்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், தோ்தல் பறக்கும் படை அலுவலா்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை செய்து வருகின்றனா். வாகனங்களில் செல்பவா்கள் பெயா், செல்லுமிடம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த பின்பே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.