பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை
சத்தியமங்கலம்: பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவுக்கு முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோா் திங்கள்கிழமை அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 45 அடியாக சரிந்துள்ளது.
அணையின் உள்பகுதியில் 25 அடிக்கு மண் படிந்துள்ளது. இதனால், அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் வண்டல் மண் திட்டுதிட்டாக காட்சியளிக்கிறது.
இந்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பெரும் உதவியாக இருக்கும். மேலும், வண்டல் மண் எடுக்கும்போது, அணையில் சமமான நிலப்பரப்பில் தண்ணீா் அதிக அளவில் தேக்கிவைக்க முடியும். எனவே, விவசாயப் பயன்பாட்டுக்காக பவானிசாகா் அணையில் இருந்து டிப்பா், லாரி, டிராக்டா்கள் மூலம் இலவசமாக வண்டல் எடுத்து செல்ல உரிய அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.