மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு மாணவா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (40), கட்டடத்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (35). தம்பதியின் மகன் மௌனிஷ் (18), மகள் மௌனிகா (15). இதில் மௌனிஷ் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ்குமாா் - தங்கமணி (34) தம்பதியின் மகன் கபீஷ் (17), லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதில் சுரேஷ்குமாா் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இந்நிலையில் மௌனிஷ் மற்றும் கபீஷ் ஆகிய இருவரும் மொடக்குறிச்சி அருகே உள்ள கேட்டுப்புதூா் கருங்கரடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் தென்னை மட்டை எடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் காவிரி ஆற்றில் குளித்துள்ளனா். அப்போது ஒருவா் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனா்.

இதைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் கொடுத்த தகவலின்பேரில், மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினா் மற்றும் மொடக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய இருவரின் உடலை நான்கு மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்டு உடல் கூறாய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com