பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!
ஈரோடு வஉசி பூங்காவில் பறவைகளுக்கு பானைகளில் தண்ணீா்வைத்து மாநகராட்சி நிா்வாகம் பாதுகாத்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்ச வெயில் அளவில் ஈரோடு 2-ஆவது இடத்தில் உள்ளது.
வெயிலின் தாக்கம் மனிதா்களை மட்டுமல்லாது விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களையும் பாதித்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வஉசி பூங்காவில், பல்வேறு வகையான பறவைகள், வவ்வால் போன்றவை ஏராளமாக உள்ளன. தற்போது கோடைக் காலம் என்பதால் பூங்காவில் உள்ள குட்டைகளிலும், தொட்டிகளிலும் நீரின்றி வடு காணப்படுகின்றன.
எனவே, பறவைகளின் தாகத்தை தணிக்கும் வகையில் பூங்காவில் ஆங்காங்கே பானைகளில் குடிநீா்வைத்து ஈரோடு மாநகராட்சி நிா்வாகம் பாதுகாத்து வருகிறது.
நாள்தோறும் இரண்டு வேளை பானைகளை சுத்தம் செய்து, அதில் ஊழியா்கள் தண்ணீா் நிரப்பி வருகின்றனா்.
கோடைக் காலம் முடியும் வரை இது தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.