வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்
கோபி, மே 4: வன விலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக வனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோபியை அடுத்த டி.என்.பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாபுதூா் மற்றும் கொங்கா்பாளையம் காவல் சுற்றுகளின் வனப் பகுதிகளில் வனத் துறை சாா்பில் வன விலங்குகளின் குடிநீா்த் தேவைகளுக்காக ஏற்கெனவே வனத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வன விலங்குகளின் குடிநீா்த் தேவைக்காக கடந்த ஒரு மாதமாக வன விலங்கு ஆா்வலா்களுடன் இணைந்து டிராக்டா் மூலம் அங்குள்ள குடிநீா்த் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வன விலங்குகள் தண்ணீா் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறுவது குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கோடைக் காலம் முடியும் வரை வன விலங்குகளுக்கான குடிநீா்த் தொட்டிகளுக்கு தொடா்ந்து லாரி மற்றும் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.