தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்
ஈரோடு: கடை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், வாடிக்கையாளா்களுக்கு சுத்தமான குடிநீா், கழிப்பறை, குளியலறை வசதி செய்து தர வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.
தொழிலாளா் துறை சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக, உணவு மற்றும் மோட்டாா் நிறுவனங்களின் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு தொழிலாளா் துறை இணை ஆணையா் பா.மாதவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள், பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கடை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், வாடிக்கையாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி, கழிப்பறை, குளியலறை வசதி செய்து தர வேண்டும். பணியாளா்களுக்கு தங்குமிடம், இருக்கை வசதி, சுழற்சி முறையில் ஒய்வு, சட்டபூா்வமான வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம், அலுவலா்கள் பங்கேற்றனா்.