கோத்தகிரி ஹில்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளியில் கைப்பந்து போட் டியின் இறுதிப் போட்டி, பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
17, 19 வயதினருக்கான கைப்பந்துப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில், 17 வயதினருக்கான பெண்கள் பிரிவில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, விஸ்வசாந்தி மெட்ரிக் பள்ளி, ஆண்கள் பிரிவில் கீழ்கோத்தகிரி அரசுப் பள்ளி, எச்ஆர்எம் மெட்ரிக்
பள்ளி, 19 வயதினருக்கான பெண்கள் பிரிவில் ஹில்ஃபோர்ட் பள்ளி, ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி, ஆண்கள் பிரிவில் கீழ்கோத்தகிரி அரசுப் பள்ளி, ஜூட்ஸ் பள்ளி ஆகியன பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் விஸ்வசாந்தி மெட்ரிக் பள்ளி, எச்ஆர்எம் பள்ளி, ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி ஆகிய பள்ளிகள் வெற்றி பெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, ஹில்ஃபோர்ட் பள்ளித் தாளாளர் பேராசிரியர் டி.ரவிகுமார் தலைமை வகித்தார். நெடுகுளா ஊராட்சித் தலைவர் புவனாகுமார், பள்ளி முதல்வர் டாக்டர் ஜெகநாதன், ரோட்டரி சங்கத் தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுந்தரதேவன் ஐஏஎஸ், மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, கோப்பைகள் வழங்கினார்.
இதில், ரோட்டரி சங்க உதவி கவர்னர் தேவராஜ், கைப்பந்து கழகச் செயலர் ஜெகநாதன், ரோட்டரி சங்கச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.