குந்தா தாலுகாவில் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி கூட்டுறவுத் தொழிற்சாலை ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 15 அரசு தேயிலை கூட்டுறவுத் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சம்பளம் உயர்த்தப்படவில்லை. தற்போது, நாள் ஒன்றுக்கு ரூ.288 சம்பளமாக வழங்கப்படுகிறது. சம்பள உயர்வு கிடைக்கும் வரை இடைக்கால நிவாரணமாக ரூ.375 வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூரில் உள்ள இன்ட்கோ சர்வ் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்தையில் வரும் 10 -ஆம் தேதிக்குள் தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் தீர்வு ஏற்படுத்த கோரி செவ்வாய்க்கிழமை முதல் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தாற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு தொழிற்சாலை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள மஞ்சூர், எடக்காடு, கிண்ணக்கொரை, இத்தலார், பிக்கட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இன்ட்கோ கூட்டுறவுத் தொழிற்சாலைகள் செயல்படாமல் உள்ளன.