கோத்தகிரி பேரூராட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கடைகள் மறு ஏலத்தில் மூன்று கடைகள் மட்டுமே ஏலம் விடப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி மூலமாக கடந்த ஜூலை 12-ஆம் தேதி, 15 கடைகள் மற்றும் பேருந்து நிலைய நுழைவுக் கட்டணத்துக்கான ஏலம் விடப்பட்டது. கடைகளை ஏலம் எடுக்க உதகை , குன்னூர், கோத்தகிரி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டனர். இதில், ஆளும் கட்சி தலையீடு காரணமாக தேதி குறிப்பிடாமல் கடந்த முறை ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பேருந்து நிலைய நுழைவுக் கட்டணத்துக்கான ஏலம் புதன்கிழமை பகல் 12 மணியளவில் செயல் அலுவலர் குணசேகரன், தலைமை எழுத்தர் நாகராஜ், சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
முன்வைப்புத் தொகையாக ரூ. 25 ஆயிரம் செலுத்தி 15 பேர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். இதில், 1-ஆம் எண் மார்க்கெட் கடையை மாத வாடகையாக ரூ. 18,600-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. 2-ஆம் எண் கடை மாத வாடகை ரூ. 14,300-க்கும், 3-ஆம் எண் கடை மாத வாடகையாக ரூ. 12,950-க்கும் ஏலம் போனது. மீதமுள்ள 12 கடைகள் ஏலம் விடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல, கடந்த முறை ரூ. 82 ஆயிரத்துக்கு ஏலம் போன் பேருந்து நிலைய நுழைவுக் கட்டணத் தொகை குறைந்தபட்சமாக ரூ. 92 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதை யாரும் ஏலம் கோரா முன்வராததால் தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.