கோத்தகிரி அருகே, தொத்தமுக்கை மற்றும் காத்துக்குளி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
கோத்தகிரி, தொத்தமுக்கை பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கரடி தாக்கியதில், கணவர், மனைவி உயிரிழந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்த கரடி சுட்டுக்கொல்லப்பட்டது. இதேபோல, கோத்தகிரி காளவாய், அரவேணு, தின்னியூர் கேசலாடா சாலையில், குட்டிகளுடன் சுற்றித் திரிந்த கரடிகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டன.
கரடி நடமாட்டம் குறைந்திருந்த நிலையில் தற்போது தொத்தமுக்கை, இருப்புக்கல் மற்றும் கேர்பன், காத்துகுளி சாலைகளில் கடந்த சில நாள்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில், சாலையில் நடமாடும் கரடிகள் அடிக்கடி சாலையைக் கடந்து, அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பதுங்கி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதனால், தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல, தொழிலாளர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
எனவே, தொத்தமுக்கை பகுதியில் ஏற்கெனவே கரடி தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதுபோல, இனியும் நடக்காமல் இருக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.