மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்கிறார்.
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கர்நாடகம் மற்றும் தமிழகத்திலுள்ள புலிகள் காப்பகங்களை நேரில் ஆய்வு செய்வதற்கான
3 நாள் கள ஆய்வு திட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை பிஆர்டி ஹில்ஸ் புலிகள் காப்பகப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் சனிக்கிழமை கர்நாடகத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்நது இரவு முதுமலைக்கு வரும் அமைச்சர் அங்கு தங்கி விட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்கிறார். அவருடன் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல ஐஜி சோமசேகரும் பங்கேற்பதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி தெரிவித்துள்ளார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் நேரடியாக மத்திய வனத் துறை அமைச்சர் புலிகள் பாதுகாப்புத் திட்டம் குறித்து ஆய்வு செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.