மஞ்சூர் அருகே கீழ்குந்தா பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நீர்த்தேக்கங்களைத் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மஞ்சூர் அருகே கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கீழ்குந்தா பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களான அம்மக்கல், ஊசிமலை, கட்லாடா, அப்புனாய், ஒசட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பெரும்பாலான நீர்த்தேக்கங்களும் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் உள்ளது. நீர்த்தேக்கங்களில் சேறும், சகதியுமாக உள்ளதால் குறைந்த அளவே தண்ணீர் சேமிக்கும் நிலை உள்ளது. மேலும், நீர்த்தேக்கங்களில் குடிநீர் வசதிக்காக பதிக்கப்பட்ட குழாய்களும் துருப்பிடித்து உறுதி இழந்துள்ளது.
இதனால், சமீபகாலமாக மஞ்சூர் உள்பட பேரூராட்சியின் பல வார்டுகளிலும் குடிநீர்ப் பிரச்னை பூதாகரமாக உள்ளது. சில பகுதிகளில் தினசரி ஒரு மணி நேரமும், ஒரு சில இடங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எனவும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே, குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அனைத்து நீர்த்தேக்கங்களையும் தூர் வாரி, புதிய குழாய்களை அமைத்து தடையில்லாமல் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.