குன்னூர் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
குன்னூர் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆற்றில் கிருஷ்ணாபுரம் வி.பி.தெரு, டி.டி.கே. சாலை அருகே வரும் இரு ஆறுகளும் சங்கமிக்கின்றன.
இதில், டி.டி.கே. சாலையோரத்தில் உள்ள ஆற்றில், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஆடுவதைக் கூடத்தில் இருந்து ரத்தக் கழிவுகள் அடிக்கடி திறந்து விடப்படுகின்றன.
இதேபோல, கிருஷ்ணாபுரம் வழியாக வரும் ஆற்றில் மார்க்கெட் பகுதியில் இருந்து இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களும் குவிந்து கிடக்கின்றன. பல இடங்களிலும் கழிவுகளை ஆற்றில் கலப்பதற்கான குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நீரைதான் காட்டேரியில் இருந்து பர்லியாறு வரையிலான வனப் பகுதியில் உள்ள விலங்குகள் அருந்துகின்றன.
இதுகுறித்து நுகர்வோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவது இதுவரை தடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்னர் பொக்லைன் மூலம் தூர்வாரப்பட்ட மண், ஆற்றோரத்திலேயே கொட்டப்பட்டுள்ளது.
மழையின்போது கழிவுகளும், குப்பைகளுடன் மண்ணில் அடித்துச் சென்று வனப் பகுதிக்குள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆற்றில் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.