வறட்சி காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு குறித்த கருத்தரங்கு மாயார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாயார் ஊர் தலைவர் குரு சித்தன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர் டோமினிக் திவ்யநாதன், கறவைப் பசு நூலின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவருமான கே.கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கில் பங்கேற்றோர் பேசும்போது, கடந்த ஆண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியின் காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மடிய நேரிட்டதாகவும், பல கால்நடைகள் பசியின் உச்சத்தில் குப்பையில் கிடந்த பிளாஸ்டிக் பைகளையும், துணிகளையும் தின்று எலும்பும், தோலுமாய் திரிந்ததோடு, இறந்த கால்நடைகளின் வயிற்றிலிருந்து ஏராளமான பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரியவந்தது. எனவே, மாடு வளர்ப்பை அலட்சியம் செய்யாமல் இக்கருத்தரங்கில் கிடைத்த தகவல்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அருளகம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், மாயார் மட்டுமின்றி மசினகுடி, மாவனல்லா, சிங்காரா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.