கோத்தகிரி லாங்வுட் சோலையில் உள்ள அன்னிய நாட்டு மரங்களை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ராஜு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகில் உள்ள 53 வகையான காடுகளில், லாங்வுட் சோலை உள்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலைக் காடுகள் குறிப்பிடத்தக்கவை. நீலகிரியில் அடிப்படை சுற்றுச் சூழல் அமைப்பு என்பது சோலைக் காடுகளையும், புல்வெளிகளையும் நம்பியே உள்ளன. பரந்த புல்வெளிகளில் காணப்படும் மாண்டேன் காடுகள்தான் நீலகிரியில் தண்ணீர்த் தொட்டி என அறியப்படுகிறது. பெய்யும் மழையில் 75 சதவீத மழைநீரை பஞ்சுப்போன்ற அமைப்புடைய மண்ணில் தேக்கிவைத்துத் தண்ணீரைத் தருகிறது.
கோத்தகிரி லாங்வுட் சோலை 25 கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்களுக்கு தண்ணீர் ஆதாரமாக விளங்குகிறது. லாங்வுட் சோலை, உட்காக், காஷ்மீர் பூச்சிப்பிடிப்பான், பிளாக்பேர்ட் உள்ளிட்ட பறவையினங்களின் வாழிடமாக உள்ளது. சோலைப் பாதுகாப்பு கமிட்டி, வனத் துறையுடன் இணைந்து சோலையைப் பாதுகாத்து வரும் நிலையில், இங்குள்ள நீர்நிலைகள், வன வளம் மேம்பட அனைவரும் பாடுபட வேண்டும். அதற்காக, சோலையில் உள்ள கற்பூரம், சீகை, சிஸ்ட்ரம் ரொபஸ்டிகம், சாம்பிராணி போன்ற அன்னிய நாட்டு மரங்களை அகற்றி, சோலை மரங்களை நடவுச்செய்வது அவசியம் என்றார்.