முதுமலை பகுதியில் உள்ள தமிழக - கர்நாடக மாநில வன எல்லையில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார், அதிரடிப் படையினர் தீடீர் ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை அருகே உள்ள தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அண்மைக்காலமாக மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மேலும், அங்குள்ள வனப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் பழங்குடியின மக்களிடம் அரசுக்கு எதிராக அவர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தும், அவர்களின் உதவியோடு தாக்குதல் சம்பவங்களையும் நிகழ்த்தி வந்துள்ளனர்.
இதைத் தடுக்கும் வகையிலும், வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் நக்ஸல் தடுப்பு போலீஸார், அதிரடிப் படையினர் அவ்வப்போது வனப் பகுதிகளில் சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
அதன்படி, தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான முதுமலை வனப் பகுதியில் நக்ஸல் தடுப்பு போலீஸார், அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.